Wednesday 9 March 2011


சிலாபம்!



கால்கள் சகதியில் சிக்கி
விழி பிதுங்கி நிற்கிறது-
கொக்கு ஒன்று!

இறக்கை அடிக்கும் ஓசைகள்
காற்றில் குறியீடுகளாக..!

அலகினை சகதியில் புதைத்து
கால் சிக்கலெடுத்து இறக்கை
விரிக்க முற்பட்டும்
மூச்சுக் குழாயின்
முக்கல்களும்..முனகல்களும்..!

பார்வையாளர்கள் உணரவில்லை..
கொக்கின் அவஸ்தை!

வந்த வரை லாபமென
கண்ணிப் போட்டு கடத்தும்
கூட்டமொன்று!..
இருக்கும் வரை யோகமென
கல் விட்டு எறியும்
கூட்டமொன்று!..

திடீரென..
குறியீடுகளின் திசை நோக்கி
அயல் தேச ராஜாளியொன்று
எச்சமிட்டுச் சென்றது.

கூட்டங்கள் கூட்டுக்குள் ஒடுங்கின.

நிலமெங்கும் நிர்மூலங்கள்
நீலம் பாவித்துக் கொண்டிருக்க..

கொக்கின் தொன்மங்கள்
எங்கோ ஒரு ஆழியில்
சிலாபம் செய்கிறது!!!



கல்லின் பிரசவ சப்தம்!




விட்டு விட்டு வீசும்
தென்றலொன்று முகத்தில் அறைய..
கருங்குயில் ஒன்றின்
கீதம் காதை முத்தமிட...

இதோ..
உளியின் விளிம்பில்
செதுக்கப்படக் காத்திருக்கும்
சிற்பமொன்றின் பிம்பம்-
விழிகளின் உள்ளே!..

நடுங்கிப் போகிறது
நெஞ்சம்..

கல்லின் பிரசவ சப்தம்!!!

நன்றி.

முதற்சங்கு&எதிர்நீச்சல்

இன்னுமிருக்கிறோம்..!





இலைகளின் இடுக்குகளில்
ஆவியாகும் வெப்பமாய்
கனவு!
நெளிந்து நழுவும்
மலை முகட்டுப் பாம்பாய்
காதல்!
இதோ...
உள்ளீடற்ற உருவமொன்றின்
உறுமல்கள் மறுசுழற்சி
செய்கிறது- கவிதையாய்!..
இன்னுமிருக்கிறோம்..
நானும் என் தனிமையும்...!!!!

நன்றி,

வலியொன்று..!



இலக்கியத்தில் இறங்காதே..
இறங்கினால்
இறக்கும் வரை உறங்காதே!
அவ்வப்போது
எழுகிறது..
மொழியென்றும் பழியென்றும்
சொல்ல இயலா வலியொன்று!...

நன்றி,
திண்ணை.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=311012315&format=html

கால்!



அகர முதல எழுத்தெல்லாம் 
சிகரம் தொட்டது ..
கவிதை காலால்!

விரல் பிடித்து 
எழுதிய நாளில் 
எத்தனை எழுத்துக்கள் 
அறிந்திருக்கும்.. பின்னொரு நாளில் 
கவிஞனின் கால் பிடித்துக்
கொண்டிருப்போமென!...



நன்றி-பத்திரிகைகள்..
எதிர்நீச்சல், முதற்சங்கு, மனசு.

முடிவுகளுக்கான முதல் ஞாபகமென..!







கவிதை நாக்கால் ருசியறிந்து 
அணுத்துகள் சிதைத்துத் தாண்டிய விழியம்பால் 
கிழித்துக் கொண்ட கனவின் 
கடைசிப் பாடல்!

அது 
சருகுகளின் நுனியில் உடையும் 
தூசுப்படிமங்களின் சல்லடைக்குள் 
பலியிடப்பட்ட விதியின் 
சப்தநாடிகள் ஓய்வெடுக்கும் 
கிரகங்களில் ஒலிக்கிறது.

அங்கே- ஒரு எச்சத்தின் மிச்சத் துளியில் 
எறும்பின்  கால்தடம் 
நுண்நுட்பமாய் தேய்ந்து 
எரிகிறது... முடிவுகளுக்கான 
முதல் ஞாபகமென!!!

நன்றி,
எதிர்நீச்சல்&முதற்சங்கு.

நகைப்பின் ஞானமொன்று...!







சிதைவுகளின் கணக்கீடுகளை தாண்டிய 
நடிப்புத்துவமாய் மனதின் முடிச்சுகள்.
ஆம்!
பிச்சைகாரனின் தட்டிலுள்ள சில்லறையை விட 
சிக்குப்பிடித்த சிகையலங்காரத்தில் 
அவிழ்ந்து விட்டது- நகைப்பின் 
ஞானமொன்று!



நன்றி,
எதிர்நீச்சல்.


ரமலான்!



கவின் மிகு புவியில்
விலை மிகு கலையாய்
பிரபஞ்ச பேரரசன் 
விதைத்திட்ட
புதையல்- ரமலான்!

கரைந்து போகும் சுவாசக் காற்றுக்கும் 
அணைந்து போகும் மூச்சு நெருப்புக்கும் 
வற்றிப் போகும் பேச்சு நீருக்குமிடையில்...

வகை வகையான ஊண் மறந்து 
ஈகை செய்து இன்புற்று 
தொகை தொகையாய் நன்செய்து
வாகை சூடுவதே- ரமலான்!

கூரான இறை சிந்தை 
கூர்தீட்டிய ஈட்டியையும் மழுங்கச் செய்யும்!

மாண்புமிகு மானிடர்களின் 
மார்க்கப் பேருரையால்
தூண் போன்று சமூகத்தை 
ஓர் கோவையில் திரட்டி 
பார் போற்றும் பண்புகளை 
கார் மேகமாய் பொழிந்து 
யார் நோக்கம் என்னவென்று 
மார் தட்டி முழங்குவது- ரமலான்!

கூழுண்டு வாழ்க்கை பிழைப்போருக்கு 
நானுண்டு தானம் செய்திடவென்று 
வாரி வழங்கும் பாரிக்கூட்டமாய்- ரமலான்
ஏறி நிற்குமிடம் சிகரமன்றோ?!

திங்கள் பார்த்து நோன்புற்று 
திங்கள் பார்த்து இன்புற்ற ரமலான் 
ஆயிரம் திங்களினும் வைரமன்றோ?!

வீரத்தின் முதல் பிறையாய்
தீரத்தின் முழு குரலாய் 
போரிட்ட ரமலான்...

இஸ்லாத்தின் சொத்தல்லவா?!
ஈமானின் வித்தல்லவா?!
விலை சொல்லவியலா முத்தல்லவா?!

கொள்கைகளை விட்டுவிட்டு 
எள்ளி நகைத்தாடி 
உள்ளங்களை வதைத்தோரை
கிள்ளியெறிந்தது- ரமலான்!

உன்னத சுவனமாம்
ஜன்னத்துல் பிர்தௌஸை
என்னாலே பெற்றிடென 
முன்னே நிற்பது- ரமலான்!

அறங்களும் அமைதிகளும் 
அடிப்படை வாழ்வென 
ஆர்ப்பரிக்கும் குர்ஆனை
அவனிக்கு அருளிய 
அற்புத திங்கள்- ரமலான்!

புலமைகளுக்கெல்லாம்
தலைமை புரிந்த அரபிமொழியில் 
'குர் ஆன் அமுதசுரபி'
பெருந்தேனாய் ஓடிட 
செருக்கு பூண்டது- ரமலான்!

மனிதங்களின் முன்னோடி 
புனிதங்களின் கண்ணாடி- ரமலான்!
ஞானங்களின் தொட்டிலில் 
கானங்கள் இசைப்பது- ரமலான்!
இதயங்களே இல்லா வாழ்க்கையில்
இமயமாய் நிற்பது- ரமலான்!

எண்ணற்ற மனங்களை 
மென்மையாய் அரவணைத்து..
'இஹ்திகாப்' எனும்
பக்தியில் நனைத்து 
சத்தியமாவதே- ரமலான்!

'லைலத்துல் கத்ர்' என்ற 
வானத்தின் சுடரொன்று 
வையத்தில் படர்ந்தெரிந்து..

மன இருளின் துயர் நீக்கி 
மறை அருளின் புகழ் நோக்கி
இறை 'ரஹ்மான்' துதிபாடி
நிறைவான அமிழ்தத்தின் 
பிறையாக ஒளிர்வதே- ரமலான்!

இவ்வினிய பெருநாளில்...

ஈந்துவக்கும் சமுதாயம் செழிக்க 
ஏந்திடுவோம் கைகள் இறையிடம்- வந்தனமாய்!!
மாந்தரினத்தின் ஒற்றுமை கொழிக்க 
சாந்தம் வளர்த்து மணப்போம்- சந்தனமாய்!!!

பூதமாய் மோதும் கனவு!




சாலைகளின் மேடுபள்ளங்களினூடே
காலணி துளைத்த கற்கால ஆயுதமாய் 
கவிதை பகிர்வு!

அதன் உயரங்களில் 
கிழித்த காற்றின் கழிவுகளை 
விரித்த சிறகின் அழகிற்குள் சிறையிட்ட 
பருந்தின் உயரப் பார்வைக்குள் 
கற்காத கலைகளின் புரிதல்!

அதை ஓங்கியுடைத்த அதிர்வுகளின் 
வியாக்கியான புனைவிற்குள் 
பூதமாய் மோதும் கனவு! 

நன்றி,
முதற்சங்கு&எதிர்நீச்சல்.

வீணான விழுதுகள்....?!


ஏனோ நிகழ்ந்த கசப்புகளாய்...
காணாமல் போன தடயங்களாய்...
வீணான விழுதுகள்...!
கபட அரசியலும்
கலப்பட மனசாட்சியும்
கலவரங்களை கல்வியாக்கி
கல்லறையை நிரப்புகிறதெனும்
நிலவரம் உணர்ந்த பின்னும்...
"நான் மௌனமாக அழுதது யாரறிவாரென
மீன் போல் ஒப்புமை செய்தாயே....
முள்ளி வாய்க்காலில் முகம் புதைத்து
கொள்ளி வைத்தனர் தமிழருக்கு!
எள்ளி நகைக்குது - சிங்களம்
தள்ளி நடிக்குது - தமிழ் வளம்!
உறவு பயிர்த்தெழுந்த உன்னில்
உரிமை உயிர்த்தெழும் முன்னே
உண்மை உயிர் விட்டதென்னே...

பிணமான தாயின் மார்பில் முகம் தோய்த்து
பசியில் பால் கேட்கும் பச்சிளம் மழலை -
குருதி குடிக்கும் புவியின் ஆழத்தினூடே
தியாகம் செய்த தாய்மை உயிரை
தேடுகிறது... செத்தது தாயா? தமிழா?
நீள் உலகெங்கும் நிரம்பியிருக்கும்
கூட்டத்திற்கு... ரணங்களின்
வடுக்களே அடையாளமாய்....!
சங்கம் வைத்து
தமிழ் விதைத்து
அகம் குளிர்ந்து
முகம் மலர்ந்தோம்.
பொன்னான பொழுது அது.
அழகு எனும் அலங்கோலம்...
நிகழ்ச்சி எனும் நிர்வாணம்...
இலக்கணம் இறந்தது.
தமிழும் மறந்தது.
வீணான விழுது இது.
பத்து திங்கள் சுமந்திருந்து
பசித்திருந்து பாலூட்டி
கண்விழித்து ஒளிகொடுத்த
தாயையே பிணமாக்கி
விட்டது - "மம்மி" என
அழைக்கும் குழந்தையின்
ஓர்சொல்!
வீணானது குழந்தையெனின்
பிணமானது தாயா? தமிழா?
காற்றிலே பறந்த மிதவை
தரையிறங்கி தடுமாறியது.
மிச்சமானது சிதிலங்கள்...!
எச்சமானது ஓலங்கள்...!
உயிரின் விலை 80 லட்சம்
உறவின் விலை எவ்வளவோ?!

நீண்டு படர்ந்த புகைவண்டி -
குண்டு வெடித்து தெறித்தது.
மாண்ட உயிருக்கு 5 லட்சம்
மீண்ட உயிருக்கு 1 லட்சம்
கொண்டு வைத்தவனின் விலை என்ன?!
ஏனோ நிகழ்ந்த கசப்பால்
காணாமல் போனது உயிரெனின்
வீணானது எது?
வாழ்க்கையா... வசந்தமா...???
யாத்திரை எனும் சூத்திரமுண்டு;
கலகம் செய்யும் அரசியல்வாதிக்கு!
ஒழுங்கான கருத்து ஒருமிக்கவில்லை.
தெலுங்கானா கழுத்து இறுகுது.
இன்று படித்தது 2 பேர் தற்கொலை...
என்று முடியும் அரசியல் விற்பனை.

பிரிவினை பாராமல் சுமந்த பேருந்திற்கு
அழிவினை நேருது; எரிவது நெருப்பு!


கயவனின் கலை
கொள்ளையும் கொலையும்!
12 -ல் நுழைந்திடும் முன்னே
16-ல் வீழ்ந்தது பெண்ணே.
தளிரொன்று நிர்வாணமாய்...
நீர்த்தொட்டியில் பிணமாய்!
வீணான விழுதே...
காயப்பட்டது கற்பா? கல்வியா???

அழகு தேவதை!



அன்ன நடை போட்டு
அழகு தேவதை வருகிறாள்...!
ஆர்ப்பரித்தெழும் அலைகடலும்
அடங்கிப் போகும்!

தகதகக்கும் மேனியால்
பிரபஞ்சத்தின் மௌனமும்
உடைந்து போகும்!

மூச்சுக்காற்றின் வெளிப்பாட்டில்
அண்டங்களின் சராசரமும் 
தெளிந்து போகும்!

புன்னகையின் மௌவலில்...
பூங்கொத்துகள்
உதிர்ந்து போகும்!

காந்த விழி வீச்சில் 
புவியீர்ப்பு விசையும்
உறைந்து போகும்!

செவ்வாயின் எச்சிலும்
செவ்வாய் கிரகத்தின் 
நீராய் மாறும்!

முகத்தின்வசீகரத்தில்
முழுமதியும் நாணத்தில்
மங்கிப்போகும்!

துள்ளும் முன்னெழில் 
கலைமானின் வரிகளையும்
மறையச் செய்யும்!

இடைமுகத்தின் ஒற்றைக்கண் 
மது நிரப்பிய கோப்பையையும்
தோற்கச் செய்யும்!

அசைந்தாடும் பின்னெழில்
இசை மீட்டும் யாழையும் 
மயங்கச் செய்யும்!

வெண் பஞ்சுப் பாதங்கள்
தண்மை மலரையும் 
ஏங்கச் செய்யும்.

ஆம்!
அன்ன நடை போட்டு
அழகு தேவதை வருகிறாள்
ஆர்ப்பரித்தெழும் அலைகடலும்

அடங்கிப் போகும்!!
தனிமை!



எனக்காய்

பற்பல முகங்களில்
சொற்சில நவில நட்பு வட்டம்!

எனக்கான...

அற்புத நண்பன்
தனிமை மட்டுமே!

தனிமையின் தன்மைகள்
ஆர்ப்பரிப்பும்...அமைதியும் கலந்தவை!

மோனங்களின் மறைவுகள்
இங்கேதான் புலப்படும்.
கானங்களின் நிறைவுகள்
அங்கேதான் பலப்படும்!

நம்மை நமக்கே
அடையாளம் காட்டுகின்ற கண்ணாடி
உண்மைகளை நாட்டுவதில் முன்னோடி!

ஞானம் புதைந்த நொடிகள்...
வானம் அளக்கும் அடிகள்!

எனை நோக்கி நீண்டு வரும்
தென்றல் கூட ஆயிரம் கவி மொழியும்!

ஆனந்தங்களின் தாண்டவம்
தனிமையோடும் வியாபிக்கும்!

அற்பமான காலங்கள்..
சிற்பமான கோலங்கள்!

தனிமை தரும் பாடங்களில்
வாழ்க்கையின் வேடங்கள்!

கடந்த கால ஞாபகமாய்
முடிந்து போன ஆதங்கமாய்
முற்றுப் பெறா நட்புகளுக்கு
தனிமையொரு தொடர் கதை!

கனவுகளில் நிறைந்து
நினைவுகளில் உறைந்து
தவிக்கின்ற காதல்களுக்கு
தனிமையொரு தொடர் கதை!

நிம்மதிகளைத் தொலைத்து
சந்ததிகளை நினைத்து
ஏங்குகின்ற மனங்களுக்கு
தனிமையொரு தனிச்சிறை!

தோல்வி தழும்பிய மனிதருக்கு
தனிமையின் கூரிய சிந்தனை- ஒரு
வழி தேடல்!

முன்னோக்கி எழுந்தால் வெற்றி!
பின்னோக்கி விழுந்தால் மரணம்!

பள்ளத்தில் வீழ்ந்த
உள்ளத்தின் உணர்வலைகளுக்கு
தனிமை என்பது அழுகை!

புகழ்ச்சிகளில் உருகி.. உருகி...
நெகிழ்ச்சிகளில் மருகி.. மருகி...
மகிழ்கின்ற ஆத்மாக்களுக்கு
தனிமை என்பது பூபாளம்!

ஆடம்பர அலங்காரம் துறந்து
ஆணவ அகங்காரம் மறந்து
ஆன்மீகம் இழைந்தோடும் ஜீவன்களுக்கு
தனிமை என்பது சாந்தி!

தனிமையொரு கலை
வாங்க இயலா விலை!

நுட்பங்கள் எல்லோருக்கும் தெரியாது
ரகசியங்கள் எல்லோருக்கும் புரியாது!

கவிஞனுக்கு
தனிமையென்பது...

ஒரு குழந்தை!

கொஞ்சுவதும்..
கெஞ்சுவதும்...
அதீதமாய்! 





மெல்லினமே! நீ 

புன்னகைக்கும் போது
புன்னை மரப்பூக்கள் 
சிந்தும் மகரந்தம்- நினைவில்!

கண்களால் எனைக் 
கைது செய்யும்போது 
மழைச் சாரல்கள்- நினைவில்!

அருகில் அமர்ந்து 
பேசும்போது 
குளிர் தென்றல்- நினைவில்!

என் தோள் சாய்ந்து 
நடக்கும்போது 
இனிய கவிதைகள்- நினைவில்!

உன் வெட்கத்தினை 
ரசிக்கும்போது 
சுகமான தீண்டல்கள்- நினைவில்!

எனக்காய்க் காத்திருக்கையில் 
உணர்வுகள் உயிர்த்தெழும்
கடலலைகள்- நினைவில்!

நீ உயிர்வாழ்வது
எனக்கென்று சொல்கையில்
ஆர்ப்பரிக்கும் காதல்- நினைவில்!

எந்தன் கவிதைகளை 
மனனம் செய்கையில்
இதமான அரவணைப்புகள்- நினைவில்!

உன் மடி மீது- என்
தலை சாய்க்கையில்
அற்புதமான தாயன்பு- நினைவில்!

தலை முடிகளுக்கிடையில் 
விரல் தொடுத்துக் கோதுகையில்
உண்மையான நட்பு- நினைவில்!

எனக்குப் பிடிப்பதெல்லாம்
உன்னால் நேசிக்கப்படுகையில்
கவின் மிகு காட்சிகள்- நினைவில்!

என்னில் பொய்க் கோபம்
காட்டும்போது
ஈர விறகுகள்- நினைவில்!

உணர்வு பூர்வமாய்
நீ அழுகையில்
எதிர்பாரா நிகழ்வுகள்- நினைவில்!

உன் வருகையைச் சொல்லும்
ரோசாப்பூ நறுமணம் வீசுகையில்
மெல்லிய ஸ்பரிசங்கள்- நினைவில்!

எனை யாருக்கும் விட்டுத்தர
நீ மறுத்திடும்போது
கண்ணீர்த்துளிகள்- நினைவில்!
ஒரு காதலன் - தன்காதலிக்காய் !


வழி மீது விழி வைப்பதா?
விழியினுள் வழி பார்ப்பதா!

இதயத்தில் இறங்கி
ஆரிக்கிள் வென்ட்ரிக்கிள்
அறைகளில் நம் காதலை 
எழுத வேண்டும்.

உயிரின் கருவே!
கனவுகளின் ராகங்களில் 
நீ பேசுகிறாய்...
கவிதைகளின் மரபுகளில் 
நீ ஆர்ப்பரிக்கிறாய்!

சந்தித்த பொன் தருணங்களைச் 
சிந்திக்கையில் கண்கள் அருவியாய்...!

வார்த்தைகள் தேய்பிறையாய்...
வருத்தங்கள் வளர்பிறையாய்..!

கவலைகளில் கண்களுக்கும்.. வலிகளில்
இதயத்திற்கும் தலைமைப் பதவி!

மனதைச் சுற்றிச் சுவருமில்லை...
இருளில்லா இரவுமில்லை!
காற்றில்லா மரமுமில்லை...

நீயில்லா உயிரில் ஈரமுமில்லை!
ஒரு காதலி-தன்காதலனுக்காய்!



என்னவனே! எந்தன் 
மன்னவனே!

இதயத்தில் பின்னிய 
வலைகளில் சிக்குண்டே 
கிடக்கின்றேனோ - இன்னமும்!

வார்த்தைகளில் உனைத் 
தேடுகிறேன்..நீயோ 
அர்த்தங்களில் புதைந்து 
கிடக்கிறாய்!

கவிதைகளில் உனைப் 
பார்க்கிறேன்..நீயோ 
கண்ணீரில் கரைந்து 
போகிறாய்!

தனிமைகளில் உனை
வேண்டுகிறேன்..நீயோ 
இனிமையில் உறைந்து 
நிற்கிறாய்!

இரவுகளில் உனை 
நினைக்கிறேன்..நீயோ 
இருளினில் தொலைந்து 
போகிறாய்!

உணர்ச்சிகளில் உனை 
தீண்டுகிறேன்..நீயோ
உயிருக்குள் நிறைந்து 
கிடக்கிறாய்!
புரட்சிகளில் பயணித்து...!




குளிர்வாட்டிடும்
காலைப் பொழுதுகளில்
தளிர் ஊட்டிடும்
சோலை வனமாய்...!

கண்களில் அழகிய
கவிதை பதுக்கி
இதயத்தில் அற்புத
இன்பம் செதுக்கி...!

இனிதாய் வரவேற்கும்
இந்திரவில் பெண்ணே!

என் உணர்ச்சிகளைக்
கிளர்ச்சியடையச் செய்யாதே!

நான் மலர்ச்சிகளைத் தேடி
வறட்சிகளின் பாதையில்
புலர்ச்சிகளை நோக்கி
புரட்சிகளில் பயணித்து
எழுச்சிகளுக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கிறேன்
நீயும்!




மேக கூட்டத்தினிடையே
வெட்கப்பட்டுப் பதுங்கும்
வெண்மதி போன்று தானடி - நீயும்
வெட்கும்போது!

தீண்டல்களால் உணர்ச்சிகளைத்
தூண்டிவிட்டு ஓடி மறையும்
தென்றல் போன்று தானடி - நீயும்
தீண்டும்போது!

அடாத மழையிலும்
விடாது அதிரும்
இடியேறு போன்று தானடி - நீயும்
கோபிக்கும்போது!

உடலெங்கும் நில்லாது
பாய்ந்தோடி உயிரூட்டும்
உதிரம் போன்று தானடி - நீயும்
முத்தமிடும்போது!

ஆதவனின் கதிர்வீச்சை
தணித்து நிழல் தரும்
விருட்சம் போன்று தானடி - நீயும்
வருடும்போது

இதயத்தில் மலர்ந்து
மணம் பரப்பும் பூவினைப்
பறிப்பது போன்று தானடி - நீயும்
பிரியும்போது!

Tuesday 8 March 2011

"உணர்வுகள்"!




சுவாசக் காற்று கரைவதாய்
மூச்சு நெருப்பு அணைவதாய்
பேச்சு நீர் வற்றுவதாய்
இதய மலை உடைவதாய்
மனப் பாலைவனம் அழிவதாய்
நரம்பு காடு எரிவதாய்
கனவு வானம் மறைவதாய்
கற்பனை நிலம் சிதைவதாய்
எண்ணக் கடல் தொலைவதாய்
எழுத்து அலை கலைவதாய்
இரத்தவானில் உறைவதாய்
கவிதை புதையல் களைவதாய்
உடல் சிற்பம் உடைவதாய்
உயிர்ப் பறவை அலைவதாய்
ஓர் உணர்வு.

வெளிப்படையாய் அழைத்த
வசந்தம்....
அடிப்படை வாழ்வின் சுகந்தம்....

ஆதியிலே அவிழ்த்த ஆனந்தத்தை
பாதியிலே அணைத்ததால்!!
பெருவெள்ளம்!



போர் மறவனின்
ரத்தம் வெற்றிப் பாதையில்
பெருவெள்ளமாகும்..!

இலட்சியம் அடைந்திட
நித்தம் உன் கனவும்
பெரு வெள்ளமாகட்டும்!

தாய் பொழியும் 
முத்தம் சேய் மனதில் 
பெரு வெள்ளமாகும்..!

இலக்கியமறிய உன் 
சித்தம் தேன் தமிழில் 
பெரு வெள்ளமாகட்டும்!

மேகம் ஒழுகும் 
சத்தம் புவனிப்பரப்பில்
பெரு வெள்ளமாகும்..!

இக்கால அநீதிக்கெதி்ராய்
யுத்தம் புரியவுன் படைபலம் 
பெரு வெள்ளமாகட்டும்!
மீண்டும் வேண்டும்!




பரந்து விரிந்த நீள் உலகில்
விரைந்து செல்லும் வாழ்க்கை.
திறந்து பேச நிறைய இருந்தும்
குறைந்து நில்லும் நாழிகை!

மறந்து போகும் மனங்களில்
இறந்து போகும் உருவங்கள்
எதுவுமே நிலையில்லை...!

நினைவுகள் மட்டும்
நிழலோடு போராடுகின்றன!

மீண்டும் வேண்டும்
நட்பின் இனிய தீண்டல்கள்!

இதயத்தின் தூண்டல்கள்
என்றும் உயிர்த்தெழுந்திட்டே
இருக்கிறது.

விடை தேடிப் புறப்படு!


வாழ்க்கை எனும் போரில் 
வாள் வீசத் தெரியாமல் 
வாடிப்போன மனிதா!
வரையறைகளை வகுத்து 
வல்லவனாய் ஆகிவிடு!

இலட்சிய விழிப்போடு 
இலக்கை அடையத் தெரியாமல் 
இருண்டு போன மனிதா!
இன்னல்களை உடைத்து 
இமயமாய் உயர்ந்திடு!

கடமை எனும் கடலில் 
கப்பல் ஓட்டத் தெரியாமல் 
கவிழ்ந்து போன மனிதா!
கவலைகளைத் துறந்து 
கரையை கண்டுவிடு!

விடியல் அறியாக் காட்டில்
விளக்கேற்றத் தெரியாமல்
விழுந்து விட்ட மனிதா!
விசும்பல்களை மறந்து
விடை தேடிப் புறப்படு!